Crude Oil Price Hike | கச்சா எண்ணெய் உயர்வால் விலைவாசி உயருமா? நிர்மலா சீதாராமன் பதில்
- கச்சா எண்ணெய் விலை பேரல் 110 டாலருக்கு மேல் விற்பனையாகிறது.
- இதனால் எரிபொருள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரான் மேற்கு ஆசிய வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அத்துடன் வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளங்கள், விமான நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான நாடுகள் எண்ணெய் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இந்த வழியாக செல்லும் கப்பலை மூழ்கடிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய மோதலால் இந்தியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு வராது என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால் சமையல் சிலிண்டர் விலை 60 ரூபாயும், வணிக சிலிண்டர் விலை 100 ரூபாய்க்கு மேலும் அதிகரித்துள்ளது.
இதனிடையே சர்வதேச சந்தையில் 2022-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 110 அமெரிக்க டாலருக்கு அதிகமாக விற்பனையாகிறது.
இதனால் இந்தியாவில் பணவீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் கவலை அளிக்கின்றன. இன்று பாராளுமன்றத்தில் கச்சா எண்ணெய விலை உயர்வால், பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி உயர்வு ஏற்படுமா என்று ரகுமான் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
இதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில் "கடந்த ஓராண்டாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த நிலையில், பிப்ரவரி 28-ந்தேதி தொடங்கிய மத்திய கிழக்கு போரால் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் பணவீக்கம் குறைந்த அளவிலேயே இருப்பதால் கச்சா எண்ணெய் உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு பல்வேறு நிதி, நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.