இந்தியா

ஆந்திராவில் மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியை மீது கல்வீசி தாக்கிய வாலிபர்

Published On 2022-08-18 06:37 GMT   |   Update On 2022-08-18 06:37 GMT
  • மாணவியின் உடலில் காயம் இருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்த ஜித்தின் பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் ஏன் குழந்தையை அடித்தாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
  • அப்போது ஆசிரியைக்கும் ஜித்தினுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் ரேபள்ளியில் அரசு பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மணி குமார் என்பவர் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். அவரது 8 வயது மகள் அதே பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமி படிக்கும் 3-ம் வகுப்பிற்கு சுஜாதா என்பவர் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சிறுமி சரிவர படிக்காததால் சுஜாதா சிறுமியை பிரம்பால் அடித்து உள்ளார். இதனால் சிறுமியின் உடலில் காயம் ஏற்பட்டது. இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். சிறுமியின் தந்தையும் அதே பள்ளியில் வேலை செய்து வருவதால் அவர்கள் சிறுமியை சமாதானம் செய்தனர்.

இருப்பினும் சிறுமி அவரது தாய் மாமாவான ஜித்தினிடம் தெரிவித்தார். மாணவியின் உடலில் காயம் இருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்த ஜித்தின் பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் ஏன் குழந்தையை அடித்தாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஆசிரியைக்கும் ஜித்தினுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜித்தின் ஆசிரியை மீது கற்களை வீசி சரமாரியாக தாக்கினார். இதனை தடுக்க வந்த மற்றொரு ஆசிரியர் மற்றும் காவலாளி மீதும் தாக்குதல் நடத்தினார். கல்விசி தாக்கியதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜித்தின் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனைக் கண்ட மற்ற ஆசிரியர்கள் 3 பேரையும் மீட்டு ரேபள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரே பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரிய நாராயணா வழக்கு பதிவு செய்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜித்தினை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News