இந்தியா

நுபுர் சர்மாவை கொல்ல வந்த பயங்கரவாதி உத்தரபிரதேசத்தில் கைது

Published On 2022-08-13 11:17 GMT   |   Update On 2022-08-13 11:17 GMT
  • முகமது நசீம் செல்போன் மெசேஜ்களை ஆய்வு செய்த போது அவனுக்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இயங்கி வந்த பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்தது.
  • ஜெயிஷ்-இ-முகமது-மற்றும் தெக்ரிக்-இ-தலிபான் ஆகிய அமைப்புகளுக்கு அவன் செல்போனில் பல்வேறு தகவல்களை பரிமாறி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

லக்னோ:

இறை தூதர் நபிகள் நாயகம் பற்றி டி.வி. விவாத மேடை நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கூறிய சர்ச்சைக்குரிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு பல கொலை மிரட்டல்களும் வந்தன.

இந்தநிலையில் நுபுர் சர்மாவை கொல்வதற்காக வந்த பயங்கரவாதி ஒருவன் உத்தரபிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டு உள்ளான். அவனது பெயர் முகமது நசீம் ( வயது 25) உத்தரபிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டம் குண்டகலா கிராமத்தை சேர்ந்தவன்.

பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அவனிடம் இருந்து வரைபடம், செல்போன், 2 சிம்கார்டு மற்றும் வெடி குண்டுகளை பறிமுதல் செய்தனர்.

போலீசார் அவனிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. முகமது நசீம் செல்போன் மெசேஜ்களை ஆய்வு செய்த போது அவனுக்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இயங்கி வந்த பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்தது.

அந்த நாடுகளை சேர்ந்த ஜெயிஷ்-இ-முகமது-மற்றும் தெக்ரிக்-இ-தலிபான் ஆகிய அமைப்புகளுக்கு அவன் செல்போனில் பல்வேறு தகவல்களை பரிமாறி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. முகமது நசீம் ஜெயிஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுடன் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தொடர்பில் இருந்து வந்து உள்ளான்.

மேலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பயங்கரவாத கும்பலிடம் இருந்து அவனுக்கு பயிற்சி பெற வருமாறு அழைப்பு வந்து உள்ளது. இதனால் அவன் விரைவில் பாகிஸ்தான் சென்று அங்கிருந்து சிரியா, எகிப்து, ஆப்கானிஸ்தான் செல்ல திட்டமிட்டு இருந்தான். இதற்காக அவன் விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தான்.

இந்த சமயத்தில் தான் அவனுக்கு நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவை கொல்லுமாறும், அரசு அலுவலக கட்டிடங்கள் அல்லது போலீஸ் படை மீது தாக்குதல் நடத்துமாறும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிடம் இருந்து உத்தரவு வந்தது.

இந்த கட்டளையை ஏற்று அவன் நுபுர் சர்மாவை கொல்ல வந்த போது தான் ஆயுதங்களுடன் சிக்கி உள்ளான்.

அவனிடம் இந்தியாவில் பயங்கரவாத அமைப்புடன் இருக்கும் தொடர்பு குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News