தெலுங்கானாவில் மதிய உணவில் புழுக்கள் இருப்பதாக பள்ளி மீது 4-ம் வகுப்பு மாணவி போலீசில் புகார்
- எங்களுக்கு டிசி கொடுத்து பள்ளியை விட்டு வெளியேற்றி விடுவதாகவும் மிரட்டல் விடுக்கின்றனர்.
- போலீசாரை அங்கு சென்று விசாரித்து வருமாறு போலீஸ் நிலைய அதிகாரி மகேந்தர் ரெட்டி உத்தரவிட்டார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மீர்பேட்டை நகராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி அங்குள்ள போலீஸ் நிலையம் சென்று, தான் படிக்கும் பள்ளி நிர்வாகம் மீது புகார் செய்துள்ளார்.
போலீஸ் நிலையத்தில் அந்த மாணவி அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு கொடுக்கும் மதிய உணவில் கற்கள், புழுக்கள் கிடக்கின்றன. இந்த உணவை எங்களால் சாப்பிட முடியவில்லை. இதுகுறித்து, பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், எங்களுக்கு டிசி கொடுத்து பள்ளியை விட்டு வெளியேற்றி விடுவதாகவும் மிரட்டல் விடுக்கின்றனர். இவ்வாறு அந்த சிறுமி கூறியுள்ளார்.
இதையடுத்து, போலீசாரை அங்கு சென்று விசாரித்து வருமாறு போலீஸ் நிலைய அதிகாரி மகேந்தர் ரெட்டி உத்தரவிட்டார். இதன்படி, அங்கு சென்ற போலீசார் சமையலறையை சோதனை யிட்டனர்.
சோதனையில் அழுகிப்போன காய்கறிகள், புழுக்கள் கலந்த அரிசி, கெட்டுப்போன எண்ணை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி மீது சிறுமி கொடுத்த புகார் அங்கு பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.