இந்தியா

லூதியானா நீதிமன்ற குண்டு வெடிப்பு வழக்கு: ரூ.10 லட்சம் அறிவித்து தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது

Published On 2022-12-02 10:34 GMT   |   Update On 2022-12-02 10:34 GMT
  • கோலாலம்பூரில் இருந்து ஹர்பிரீத் சிங் இன்று இந்தியா திரும்புவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
  • ஹர்பிரீத் சிங்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்தவர் ஹர்பிரீத் சிங். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி லூதியானாவில் உள்ள நீதிமன்ற கட்டிடத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 6 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) போலீசார் நடத்திய விசாரணையில் ஹர்பிரீத்சிங்கிற்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் பாகிஸ்தானை தளமாக கொண்ட ஒரு சர்வதேச அமைப்பின் தலைவருடன் சேர்ந்து இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து ஹர்பிரீத் சிங் இன்று இந்தியா திரும்புவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் வந்த ஹர்பிரீத் சிங்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News