இந்தியா

ஆந்திராவில் ஏர் கலப்பையில் குழந்தைக்கு தொட்டில்கட்டி உழவு பணி

Published On 2023-05-13 11:45 IST   |   Update On 2023-05-13 11:45:00 IST
  • ஏர் உழவு பணியின் போது கலப்பையில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை படுக்க வைக்கின்றனர்.
  • ஏர் உழும்போது மாடுகளின் ஆனந்த நடையில் மணி ஓசை கேட்கிறது. தொட்டில் தானாக அசைந்து தாலாட்டுவது போல உள்ளது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பொல்லாவரத்தை சேர்ந்தவர் மது. இவரது மனைவி ஷிரவாணி. விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.

தம்பதிக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது. அவர்களது குழந்தையை கவனித்துக் கொள்ள வீட்டில் யாரும் இல்லை. தினமும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதனால் மது தம்பதியினர் விவசாய பணிக்கு செல்லும் போது தங்களது குழந்தையையும் உடன் எடுத்துச் செல்கின்றனர்.

ஏர் உழவு பணியின் போது கலப்பையில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை படுக்க வைக்கின்றனர்.

ஏர் உழும்போது மாடுகளின் ஆனந்த நடையில் மணி ஓசை கேட்கிறது. தொட்டில் தானாக அசைந்து தாலாட்டுவது போல உள்ளது.

குழந்தையை தொட்டிலில் போட்ட சிறிது நேரத்தில் தூங்கி விடுகிறது. மது தம்பதியினரும் தங்களது பணிகளை இடையூறு இன்றி செய்து வருகின்றனர்.

குழந்தை பசிக்கு அழும்போது மட்டும் குழந்தையை தொட்டிலில் இருந்து தூக்கி ஷிரவாணி பால் கொடுக்கிறார்.

மீண்டும் தொட்டிலில் போட்டவுடன் குழந்தை தூங்கி விடுகிறது. இதனை காணும் அப்பகுதி மக்கள் மது தம்பதியினரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

மேலும் குழந்தையை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News