இந்தியா

சந்திரசேகரராவ் மகளுக்கு எதிரான கருத்து- பா.ஜ.க., எம்.பி. வீட்டை சூறையாடிய டி.ஆர்.எஸ். கட்சியினர்

Published On 2022-11-19 12:11 IST   |   Update On 2022-11-19 12:11:00 IST
  • அரவிந்த் எம்.பி. வீட்டின் மீது தாக்குதல் நடத்திய டி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
  • இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெருலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. தர்மபுரி அரவிந்த் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்தார்.

அப்போது சந்திரசேகரராவின் மகள் கவிதா முதல்வர் பதவி மீது அதிருப்தியில் உள்ளார். தெலுங்கானா ராஷ்டிரிய கட்சியை தேசிய கட்சியாக அறிவித்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள வில்லை.

மாறாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்டு காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் நேற்று ஐதராபாத்தில் உள்ள பா.ஜ.க. எம்.பி. தர்மபுரி அரவிந்த் வீட்டின் முன்பாக குவிந்தனர். எம்.பி.க்கு எதிராக கோஷமிட்டனர். எம்.பி. வீட்டின் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினர்.

இந்த தாக்குதலில் எம்.பி.யின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் கதவுகள் சேதம் அடைந்தன.

மேலும் வீட்டில் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டி ஆர் எஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்களை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர். அப்போது அவர்கள் போலீஸ் வாகனங்கள் மீதும் கற்களை வீசியதால் போலீசாரின் வாகனம் சேதம் அடைந்தது.

பா.ஜ.க. எம்.பி. வீட்டை சூறையாடிய காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியது. இந்தசம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரு கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையால் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தருமபுரி அரவிந்த் எம்.பி. வீட்டின் மீது தாக்குதல் நடத்திய டி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 30 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 70 பேரை தேடி வருகின்றனர்.

இது குறித்து சந்திரசேகரராவின் மகள் கவிதா கூறியதாவது:-

நான் கண்ணியமான அரசியல்வாதி. பா.ஜ.க.வில் இருக்கும் ஒரு சிலர் மூலமாக பாஜகவில் சேரும்படி எனக்கு அழைப்பு விடுத்தனர்.

இதற்கு ஷிண்டே மாடல் என பெயர் வைத்து உள்ளனர். நான் பா.ஜ.க.வில் சேர்வதற்கு மறுப்பு தெரிவித்து விட்டேன். எனது இதயம் முழுவதும் டி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் கட்சியில் உள்ளது.

தர்மபுரி அரவிந்த் எம்.பி. தொடர்ந்து இதுபோன்ற அவதூறான கருத்துக்களை பரப்பினால் பதிலடி கொடுப்பேன் என தெரிவித்தார்.

தெலுங்கானா மாநிலத்தில் எதிர்கட்சியாக உள்ள பா.ஜ.க. வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த மாதம் டி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வில் இணைவதற்காக தலா ரூ.100 கோடிக்கு பேரம் பேசியதாக 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News