இன்று காலை திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகள் தூக்கிட்டு தற்கொலை
- மணமகள் தற்கொலை செய்து கொண்டதால் திருமண மண்டபம் சோகத்தில் மூழ்கியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத், நயிம்பேட்டையை சேர்ந்தவர் ரவளி (வயது22). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் அவரது பெற்றோர்கள் திருமணம் நிச்சயித்து இருந்தனர்.
இந்த திருமணத்தில் ரவளிக்கு விருப்பம் இல்லாததால் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இருப்பினும் ரவளியின் பெற்றோர் திருமணத்திற்கு தடல்புடலாக ஏற்பாடுகளை செய்து வந்தனர். இன்று காலை 10 மணிக்கு திருமணம் நடக்க இருந்ததால் நேற்று மாலையே மணமகன், மணமகள் உறவினர்கள், நண்பர்கள் திருமண மண்டபத்தில் குவிந்தனர். நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் திருமணம் மண்டபம் கலை கட்டியது.
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு ரவளி வீட்டிற்கு சென்று வருவதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு சென்றார். வீட்டிற்கு சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் திருமண மண்டபத்திற்கு திரும்பி வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த அறையில் மின்விசிறியில் ரவளி பிணமாக தொங்கினார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நிஜாமாபாத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவளியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ரவளியின் விருப்பத்திற்கு மாறாக திருமண ஏற்பாடு செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
மணமகள் தற்கொலை செய்து கொண்டதால் திருமண மண்டபம் சோகத்தில் மூழ்கியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.