இந்தியா

ஆந்திராவில் வந்தேபாரத் ரெயில் மீது 3-வது முறையாக கல்வீசி தாக்குதல்

Published On 2023-04-06 05:23 GMT   |   Update On 2023-04-06 05:23 GMT
  • ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.
  • ரெயில் மீது கல்வீசி தாக்கியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம் வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

ரெயில் சேவை தொடங்கப்பட்ட சிறிது நாட்களிலேயே அடுத்தடுத்து 2 முறை வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்குதல் சம்பவம் நடந்தது.

நாளை மறுதினம் தெலுங்கானா ஆந்திரா இடையே செகந்திராபாத்தில் இருந்து திருப்பதி வரை 2-வது வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரே ஒரு வந்தே பாரத் ரெயில் சேவை மட்டுமே தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஆந்திரா தெலுங்கானா இடையே 2-வது வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு சென்ற வந்தே பாரத் ரெயில் மீது தண்டவாளம் அருகே பதுங்கி இருந்த மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் ரெயில் மீது கல்வீசி தாக்கியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வந்தே பாரத் ரெயில் மீது 3-வது முறையாக கல் வீசி தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News