செய்திகள்
புனித் ராஜ்குமார்

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்ப மருத்துவருக்கு கொலை மிரட்டல் - பாதுகாப்பு வழங்க கோரிக்கை

Published On 2021-11-07 05:16 GMT   |   Update On 2021-11-07 06:13 GMT
புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு மருத்துவர் ரமணா ராவ் அளித்த தவறான சிகிச்சை முறையே காரணம் என்று அவரது ரசிகர்கள் குற்றம்சாட்டுவதுடன் கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர்.
பெங்களூரு:

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் 29-ம் தேதி அன்று மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, குடும்ப நல மருத்துவர் ரமணா ராவ் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், புனித் ராஜ்குமார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு மருத்துவர் ரமணா ராவ் அளித்த தவறான சிகிச்சை முறையே காரணம் என்று அவரது ரசிகர்கள் குற்றம்சாட்டுவதுடன் கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர். 

இதனால் மருத்துவர் ரமணா ராவுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்ஸ் அசோசியேஷன் சார்பில் கர்நாடகா மாநில முதல் மந்திரி பசவராஜ் பொம்மையிடம் முறையிடப்பட்டது.

இதுகுறித்து அதன் தலைவர் பிரசன்னா எச்.எம்., கூறியதாவது:-

புனித் ராஜ்குமாரின் மரணம் தொடர்பாக, ஊடகங்களில் தொடர்ந்து மருத்துவச் சேவையை சித்தரிக்கப்பட்ட விதம் கவலை அளிக்கிறது. 

சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை, குறிப்பாக தன்னால் முடிந்த சிகிச்சையை அளித்த ரமணா ராவ் மீது பொதுமக்கள் சுட்டிக்காட்டும் குற்றச்சாட்டுகளை கடுமையாக எதிர்க்கிறோம்.

மருத்துவ தொழிலுக்கு வரம்புகள் உள்ளன. உயிர்களைக் காப்பாற்றுவது எப்போதும் சாத்தியமில்லை என்பது நமக்கு தெரியும். இல்லை என்றால் யாரும் இறக்க மாட்டார்கள்.

பொது மக்களின் கண்ணோட்டம் மற்றும் ஊடகம் வெளியிடும் தவறான செய்திகள் சமூகத்தில் மருத்துவச் சேவை மீது அவநம்பிக்கையை உருவாக்குகிறது.

இதனால், ரமணா ராவ் மற்றும் புனித் ராஜ்குமாரின் சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவ நிபுணர்களின் பாதுகாப்பிற்கு தயவு செய்து போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News