செய்திகள்

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் - ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் சிறையில் அடைப்பு

Published On 2018-12-31 10:40 GMT   |   Update On 2018-12-31 10:40 GMT
இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது நாடு முழுவதும் வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமார் இன்று சிறையில் அடைக்கப்பட்டார். #antiSikhriots #SajjanKumar #Mandolijail
புதுடெல்லி:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984  அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரம் தொடர்பாக டெல்லி கோர்ட்டில் நடந்துவந்த வழக்கு விசாரணையில் முதல்முறையாக ஒருவருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் கடந்த 20-11-2018 அன்று தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய்  பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.


இந்நிலையில், முன்னர் இந்த கலவர வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு கடந்த 17-ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் மகேந்தர் யாதவ் மற்றும் கிஷன் கோக்கார் ஆகியோருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தண்டிக்கப்பட்ட சஜ்ஜன் குமார், மகேந்தர் யாதவ் மற்றும் கிஷன் கோக்கார் ஆகியோர் இன்று டெல்லியில் உள்ள கர்கர்டூமா நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

சஜ்ஜன் குமாரின் உயிருக்கு ஆபத்து உள்ளதால் பாதுகாப்பு கருதி அவரை திகார் சிறையில் வைக்க வேண்டும் என்று கோரிய அவரது வழக்கறிஞரின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார்.

உரிய பாதுகாப்புடன் அவரை தனி வாகனத்தில் கொண்டுசென்று மன்டோலி சிறையில் அடைக்குமாறு போலீசாரை நீதிபதி அறிவுறுத்தினார். இதைதொடர்ந்து சஜ்ஜன் குமார் சுமார் 3 மணியளவில் மன்டோலி சிறையில் அடைக்கப்பட்டார். #antiSikhriots #SajjanKumar #Mandolijail
Tags:    

Similar News