செய்திகள்

உ.பி.யில் போலீஸ்காரரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவேக் திவாரியின் குடும்பத்தினரை சந்தித்து அகிலேஷ் யாதவ் ஆறுதல்

Published On 2018-10-01 17:24 GMT   |   Update On 2018-10-01 17:24 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீஸ்காரரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன ஊழியர் விவேக் திவாரியின் வீட்டுக்கு சென்ற முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். #AkhileshYadav #VivekTiwarideath
லக்னோ :

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் விவேக் திவாரி. இவருக்கு கல்பனா என்ற மனைவியும், ஷானு (12), ஷிவி (7) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
 
28-9-2018 அன்றிரவு விவேக் திவாரி தனது தோழியுடன் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு காரில் சென்றார். நள்ளிரவு 1.30 மணியளவில் கோமதி நகர் விரிவாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவரது காரை நிறுத்துமாறு கூறினர்.

ஆனால் அவர் காரை நிறுத்தாமல் சென்றதால் போலீஸ்காரர்கள் பிரசாத் சவுத்திரி, சந்தீப் ஆகியோர் ஆத்திரம் அடைந்து மோட்டார் சைக்கிளில் காரை துரத்தி துப்பாக்கியால் சுட்டதில் அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ்காரர்கள் பிரசாந்த் சவுத்ரி, சந்தீப் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், போலீஸ்காரரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவேக் திவாரியின் வீட்டுக்கு சென்ற முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்  அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் ஊடகங்களை சந்தித்த அவர், ’பாஜக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை, உயிரிழந்த விவேக் திவாரியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ. 5 கோடி வழங்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்’ என அவர் வலியுறுத்தினார். #AkhileshYadav #VivekTiwarideath
Tags:    

Similar News