அரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்
வாரங்கல்:
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்ட பெண் கலெக்டர் அம்ரபாலி கடா. 2016-ம் ஆண்டு கலெக்டராக பொறுப்பேற்று அவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கலெக்டர் அம்ரபாலி கடாவுக்கு வாரங்கலில் உள்ள பழமையான பங்களா ஒன்று தங்குவதற்காக ஒதுக்கப்பட்டது. 133 ஆண்டு பழமையான அந்த பங்களா புதுப்பித்து தரப்பட்டது.
இதையடுத்து அம்ரபாலி கடா அந்த பங்களாவுக்கு சென்று தங்கினார். அந்த பங்களாவில் பேய் இருப்பதாக அங்கு முன்பு தங்கியவர்கள் எச்சரித்தனர். ஆனால் அதை பொறுப் படுத்தாமல் அவர் தங்கினார். மேலும் பங்களாவில் இருந்தபடி நிர்வாக பணிகளையும் மேற்கொண்டார்.
இந்த நிலையில் அரசு பங்களாவில் பேய் இருப்பதாக அவர் அலறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ பதிவு இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பழமையான அந்த பங்களாவில் பேய் இருக்கிறது. முதல் தளத்துக்கு நான் சென்று பார்த்தபோது அங்கு பழைய நாற்காலிகள், குப்பைகள் இருந்தன. அவை அகற்றி சுத்தப்படுத்தப்பட்டன. ஆனால் நான் முதல் தளத்தில் தூங்க மறுத்துவிட்டேன்.
இந்த பங்களாவை பற்றி ஆய்வு செய்தபேது நிஜாம் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் பால்மர் கட்டி உள்ளார். பங்களா குறித்து அறிந்து ஆர்வமுடன் இருந்ததால் ஆவண காப்பகங்களில் தேடியபோது அந்த தகவல்களை அறிந்தேன்.
இந்த பங்களாவின் முதல் தளத்தில் அமானுஷ்ய செயல்கள் இருப்பதை உணர்ந்தேன். பங்களாவுக்கு செல்லும் போது என்னிடம் முதல் தளத்துக்கு சென்று தூங்க வேண்டாம் என்று எச்சரித்து இருந்தனர். அதனால் அங்கு தூங்க செல்லவில்லை.
பங்களாவில் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டு மழை நீர் கசிகிறது. அதை சரி செய்யும் பணி நடக்கிறது. பங்களாவின் ஒரு பகுதியில் தான் பேய் வசிக்கிறது. அதுவரையில் எனக்கு மகிழ்ச்சி தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டரே அரசு பங்களாவில் பேய் இருப்பதாக கூறி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.