செய்திகள்

மகன் திருமணத்திற்கு வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாததால் உயிரை மாய்த்த விவசாயி

Published On 2016-12-19 17:34 IST   |   Update On 2016-12-19 17:34:00 IST
உத்தரபிரதேச மாநிலத்தில் மகன் திருமணத்திற்கு பணம் எடுக்க முடியாத காரணத்தினால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முசாபர்நகர்:

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் பணம் எடுக்க பெரும் சிரமத்தை எதிர்க்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் இல்லாத நிலை தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் சுபகாரிய நிகழ்ச்சிகள் போன்ற முக்கிய செலவுகளுக்கு போதிய பணம் எடுக்க முடிவதில்லை. குறிப்பாக திருமண வீட்டாருக்கு பணம் எடுக்க மத்திய அரசு நிபந்தனை தளர்வு செய்து இருந்தாலும் பண தட்டுப்பாடு காரணமாக அவர்களும் பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவர் தன்னுடைய மகனின் திருமணத்திற்கு பணம் எடுக்க முடியாத காரணத்தினால் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளார்.

முசாபர்நகர் மாவட்டம் சாத்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சதிஷ்குமார் (வயது 48), பழைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை அடுத்து தன்னிடம் இருந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து உள்ளார். மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளநிலையில் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுக்க முடியாமல் தவித்து உள்ளார். இதனால் விரக்தியில் விஷம் அருந்திவிட்டார் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

விஷம் அருந்திய சதிஷ் குமார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பெரும்பாலானோர் ரூபாய் நோட்டு பிரச்சனை காரணமாக திருமண விழாவில் ஆடம்பர செலவை குறைத்துக் கொண்டு வருகின்றனர்.

Similar News