கதம்பம்

ஜெல்லி..கவனம் தேவை..

Published On 2022-06-06 11:04 GMT   |   Update On 2022-06-06 11:04 GMT
  • ஜெலட்டின் கலந்த உணவுகள் இப்போது ஏராளம்.
  • பல வண்ணங்களில் கிடைக்கும் ஜெல்லி அல்லது ஜெல்லடின் பவுடராக, சிறு குச்சிகளாக, சிறு துகள்களாகக் கிடைக்கிறது.

குழந்தைகள் சாப்பிடும் ஜெல்லி மற்றும் ஜெலட்டின் வகை உணவுகள் எதில் இருந்து எடுக்கப்படுகிறது தெரியுமா..?

சைவம், அசைவம் என்று எந்த வகை உணவும் எடுத்துக் கொள்பவர்கள், இறுதியாக ஏதேனும் பழம் அல்லது இனிப்பு கலந்த உணவு எடுத்துக் கொள்வது வழக்கம். அது ஐஸ்கிரீம், ஐஸ் கிரீம் கலந்த பழக் கலவை, ஃபலூடா என்னும் பழங்கள், நட்ஸ், ஜெல்லி, ஐஸ்கிரீம் கலவை, கஸ்டர்ட், பழ ஜூஸ், மில்க் ஷேக், வெறும் இனிப்பு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இப்போதைய டிரண்டிங்கில், வாசனையாக, வண்ணமயமாக, ஆசையையும், ஆர்வத்தையும் தூண்டும் அளவிற்கு உணவுகளை பரிமாறுவது தான் அனைவருக்கும் பிடிக்கும் ஒன்று. அதில் நுணுக்கமான சமையல் கலையும் அடங்கியுள்ளது.

அந்த வகையில், ஜெலட்டின் கலந்த உணவுகள் இப்போது ஏராளம். பல வண்ணங்களில் கிடைக்கும் ஜெல்லி அல்லது ஜெல்லடின் பவுடராக, சிறு குச்சிகளாக, சிறு துகள்களாகக் கிடைக்கிறது. இதைத் தண்ணீருடன் கலந்து குளிர்விக்கும் போது, கொழகொழப்பான அதே நேரம் கெட்டியான, தளதளவென்ற பதத்தில் சிறு சிறு கேக்குகள் கிடைக்கும். இவைதான் பல வகையான இனிப்புகளில் சேர்க்கப்படுகின்றன.

உண்மையில் இந்த ஜெலட்டின் என்பது, விலங்குகளின் எலும்பு, ஜவ்வு, இணைப்புத் திசுக்கள், மென்மையான எலும்பு திசுக்கள் போன்றவற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. இது பலகட்ட செய்முறைகள் கடந்து வேதிப் பொருட்கள், வண்ணங்கள் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.

சைவ உணவாளர்கள், இது தெரிந்தவர்கள், இந்த ஜெல்லியை சாப்பிட மாட்டார்கள். ஆனால் பலருக்கும் இது தெரிந்திருப்பது இல்லை. அந்த பாக்கெட்டின் குறிப்பிலேயே 'animal origin's என்று இருக்கும். அதைப் பார்த்துதான் வாங்கவேண்டும்.

இதே ஜெல்லி, தாவர வகையில், கடல் பாசியில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது. இதை சைவப் பிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இரு வகை ஜெல்லியிலும் அதிக சர்க்கரை தான் கலக்கப்படுகிறது. எனவே கலோரியும் அதிகம். இது ஒருபுறம் இருக்க, அதிகப்படியான வண்ணங்கள், preservatives சேர்க்கப்படுவதால் பல வகையில் குழந்தைகளுக்கு உடல்நலக் கேடுகளையே கொடுக்கிறது. குறிப்பாக உடல்பருமன் மற்றும் பற்களில் சொத்தை, பசியின்மை போன்றவை ஏற்படும்.

- வண்டார்குழலி ராஜசேகர்

Tags:    

Similar News