உண்மை எது

அக்னிபாத் போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ளச் சொன்னாரா நிர்மல் குமார்?

Published On 2022-06-20 14:12 GMT   |   Update On 2022-06-20 14:12 GMT
  • பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் கூறியதாக சமூக வலைத்தங்களில் நியூஸ் கார்டு பரவியது.
  • கலவரம் ஏற்படுத்த தூண்டிவிடும் தேச விரோத சக்திகளை மக்கள் கண்டறிய வேண்டும் என நிர்மல் குமார் கூறுகிறார்

ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு வீரர்களை சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. வட மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபடும் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. வன்முறையாளர்களுக்கு ராணுவத்தில் இடம் இல்லை என ராணுவ உயர் அதிகாரி கூறி உள்ளார்.

இந்த சூழ்நிலையில், அக்னிபாத் போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ளவேண்டும் என பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் கூறியதாக சமூக வலைத்தங்கள் மூலம் தகவல் (நியூஸ் கார்டு) பரவியது. அந்த கார்டில், "மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கும் தேசவிரோதிகளை சுட்டுத் தள்ள வேண்டும். பிரதமர் மோடியின் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் உறங்கிக் கொண்டு இருப்பது அசிங்கமாக உள்ளது – நிர்மல் குமார் ( பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு)" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நியூஸ் கார்டு வைரலான நிலையில், இது போலியாது என நிர்மல் குமார் கூறி உள்ளார். அந்த நியூஸ் கார்டையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு Fake Card என தெரிவித்துள்ளார்.

அதேசமயம், அக்னிபாத் போராட்டத்திற்கு எதிராக நிர்மல் குமார் தொடர்ந்து தனது கருத்தை பதிவு செய்து வருகிறார்.

இன்று வெளியிட்ட பதிவில், "17 வயதில் ஏழை எளிய மக்களுக்கு வேலையை உறுதி செய்துள்ள மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சொத்துக்களை சேதம் விளைவிக்க மற்றும் கலவரம் ஏற்படுத்த தூண்டிவிடும் தேச விரோத சக்திகளை மக்கள் கண்டறிய வேண்டும்..." என கூறியிருக்கிறார் நிர்மல் குமார்.

Tags:    

Similar News