உண்மை எது
மேற்கு வங்காளத்தில் எரித்துக்கொல்லப்பட்ட 8 பேரும் இந்துக்கள்?- பரவும் போலி செய்தியால் பதற்றம்
போலி செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு வங்க போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேற்கு வங்காளம் மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதியில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் பாதுஷேக் என்பவர் கடந்த திங்கள் அன்று இரவு கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 8 பேர் எரித்துக் கொல்லப் பட்டனர்.
இந்த செய்தியை பகிர்ந்த சில ட்விட்டர் கணக்குகள் எரித்துகொல்லப்பட்ட அனைவரும் இந்துக்கள். 8 பேர் அல்ல 12 பழங்குடியின இந்துக்களை திரிணாமூல் காங்கிரஸ் கொன்றுள்ளது. இதில் 10 பேர் இந்து பெண்கள், 2 பேர் குழந்தைகள். இந்த பயங்கரவாதம் தான் இந்தியாவில் நிகழ்கிறது. ஆனால் இந்திய ஊடகங்கள் உக்ரைன் மக்களை பற்றி கவலைப்பட்டுகொண்டிருக்கிறது என பதிவிட்டன.
இதனால் சமூக வலைத்தளங்களில் வெறுப்பு கருத்துக்கள் பரவத்தொடங்கின. இதை விசாரித்த மேற்கு வங்காள காவல்துறை, ட்விட்டரில் வெளியான தகவல்கள் எதுவும் உண்மையில்லை என தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட அனைவரும் இஸ்லாமியர்கள். இந்த சோக சம்பவத்தை வைத்து போலி செய்திகளை பரப்பி வெறுப்பை விதைக்க நினைப்பவர்கள் மீது வழக்குப் பதியப்படும் என தெரிவித்துள்ளது.
— West Bengal Police (@WBPolice) March 23, 2022