உண்மை எது
விவாசயிகள்

விவசாயிகளுக்கு வட்டியே இல்லாமல் ரூ.3 லட்சம் கடன் தரும் மத்திய அரசு?

Published On 2022-03-17 12:21 GMT   |   Update On 2022-03-17 12:21 GMT
விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கப்படுவதாக வெளியான செய்தி குறித்து மத்திய அரசும், எஸ்.பி.ஐ வங்கியும் விளக்கம் அளித்துள்ளன.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு, ஏப்ரல் 1-ம் தேதி முதல் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் மூலம் வட்டியே இல்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கவுள்ளதாக இந்தி பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அந்த செய்தி உண்மையில்லை என தற்போது மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பத்திரிகையில் வெளியான செய்தியில் மாண்புமிகு பிரதமரின் முயற்சியால் இந்த கடன் வழங்கப்படுவதாகவும், பிரதமருக்கு எப்போதும் நன்றியுடன் இருப்போம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசு வட்டியில்லாமல் விவசாயிகளுக்கு கடன் எதுவும் வழங்கவில்லை என தெரிய வந்துள்ளது.

இந்த செய்தி குறித்து எஸ்பிஐ வங்கி அளித்த விளக்கத்தில், விவசாயிகளுக்கு 9 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனுக்கு மத்திய அரசின் மானியத்தின் மூலமாக 2 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இதன்மூலம் விவசாயிகள் 7 சதவீத வட்டியில் கடன் பெற முடியும். ஆனால் வட்டியில்லாத கடன்கள் வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதேபோன்று மற்றொரு செய்தி ஒன்றில் மத்திய அரசு ரூ.3 லட்சம் வரை வருடத்திற்கு 4 சதவீதம் வட்டி என்ற விகிதத்தில் கடன் வழங்குவதாகவும் வெளியாகி இருந்தது. இந்த கடனை பெறுவதற்கு விவசாயிகள் ஏற்கனவே வாங்கிய கடனை சரியான நேரத்திற்கு செலுத்தி இருக்க வேண்டும். இதன்மூலம் அடுத்தமுறை கடன் வாங்கும்போது 3 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு, வருடத்திற்கு 4 சதவீதம் வட்டி செலுத்தினால் போதும் என கூறியிருந்தது. 

தற்போது இந்த செய்தியும் உண்மை இல்லை என உறுதியாகியுள்ளது.
Tags:    

Similar News