உண்மை எது
போப் பிரான்சிஸ் கூறியதாக வைரலாகும் பகீர் தகவல்
பைபிள் காலாவதியாகிவிட்டது என போப் பிரான்சிஸ் கூறியதாக பகீர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுக்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செய்தி குறிப்பு போன்று காட்சியளிக்கும் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் ஸ்கிரீன்ஷாட்டில், 'போப் பிரான்சிஸ் பைபிள் காலாவதியாகிவிட்டது. இதனால் பைபிளுக்கு மாற்றாக பிப்ளியா 2000 எனும் புதிய புத்தகத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாக,' குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
'பைபிள் முழுமையாக காலாவதியாகிவிட்டது. இதனை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. பைபிள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படுகிறது. பைபிளுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் புத்தகம், அதன் பெயர் மற்றும் அதில் இருக்கும் தரவுகள் பற்றிய இறுதி முடிவு தேவாலயத்தின் உயர் அதிகாரிகளுடன் நடைபெற இருக்கும் கூட்டத்தில் வெளியாகிறது. ஏற்கனவே புதிய புத்தகத்திற்கான பெயர்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. இவற்றில் பிப்லியா 2000 அதிக சக்திவாய்ந்ததாக உள்ளது,' என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் தகவல் பற்றிய இணைய தேடல்களில் பைபிள் மாற்றப்பட இருப்பதாக கூறும் தகவலில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் வைரல் பதிவுகளில் உள்ள ஸ்கிரீன்ஷாட் 2018 ஆம் ஆண்டு கேலி வலைதளம் ஒன்றில் பதிவிடப்பட்ட செய்தி தொகுப்பு ஆகும். இந்த வலைதளங்களில் உண்மையற்ற செய்திகள் கேலி செய்யும் நோக்கில் பதிவிடப்படுகின்றன.
போப் பிரான்சிஸ் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அந்த வகையில் பைபிளுக்கு மாற்றாக பிப்லியா 2000 எனும் புத்தகம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.