உண்மை எது
உண்ணாவிரத போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்
எம்.பி.க்களின் உண்ணாவிரத போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த கூட்டத்தொடரின்போது அவையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக அவர்கள் மீது இந்த கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் உள்ள காந்தி சிலையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காந்தி சிலையின் பின் சிலர் நின்று கொண்டே உணவு உட்கொள்ளும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்ணாவிரதம் இருக்கும் எம்.பி.க்கள் காந்தி சிலையின் பின் உணவு உட்கொள்கின்றனர் எனும் தலைப்பில் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. வைரல் பதிவு குறித்த இணைய தேடல்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்.பி.க்கள் உண்ணாவிரதம் இருப்பதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது.
நாங்கள் உண்ணாவிரதம் இருப்பதாக யார் கூறியது? ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து காந்தி சிலையின் முன் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறோம் என எம்.பி.க்களில் ஒருவரான பிரியண்கா சதுர்வேதி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். அந்த வகையில் எம்.பி.க்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவே இல்லை என உறுதியாகிவிட்டது.