செய்திகள்
பாராளுமன்றம்

வேலூர் தொகுதியில் தேர்தல் - பணப்பட்டுவாடாவை தடுக்க கடும் நடவடிக்கை

Published On 2019-07-05 06:00 GMT   |   Update On 2019-07-05 06:43 GMT
வேலூர் தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலூர்:

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ந்தேதி தேர்தல் நடை பெற உள்ளது.

இதையொட்டி அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தன.

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பாணை முறையாக அரசிதழில் வருகிற 11-ந்தேதி (வியாழக்கிழமை) வெளியிடப்படும். அன்றைய தினமே வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. 18-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

வேட்புமனுக்கள் 19-ந்தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான இறுதிநாள் 22-ந்தேதியாகும். அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

ஆகஸ்டு 5-ந்தேதி வாக்குப் பதிவும், 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. 11-ந்தேதி தேர்வு நடத்தை விதிகள் முடிவுக்கு வரும்.

இந்த நிலையில் வேலூர் தொகுதியில் நடந்து வரும் தேர்தல் பணிகள் குறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதி வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு மற்றும் வேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மூன்றாம் பாலினத்தவர் 102 பேர் உள்பட 14 லட்சத்து 26 ஆயிரத்து 991 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.

தேர்தலில் வாக்களிக்க 690 வாக்குச்சாவடி மையங்களில் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. அதில் 133 வாக்குச்சாவடி பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு 133 நுண்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்தல் பணியில் 3,200 மத்திய, மாநில அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தலில் 1,880 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் வி.வி. பேட்டுகளும் பயன்படுத்தப்படும்.

 


தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்தவும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் 18 பறக்கும்படை குழுக்கள், 18 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கட்டுப்பாட்டு அறை இன்று முதல் செயல்படும்.

வேலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. அடுத்த மாதம் 11-ந்தேதி வரை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மனு நீதி நாள் முகாம், அம்மா திட்ட முகாம், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம், அரசு விழாக்கள் நடைபெறாது. மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற அலுவலகங்களும் தேர்தல் விதிமுறைக்காக பூட்டி சீல் வைக்கப்படும்.

ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் டெபாசிட் தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்படும். தேர்தலை அமைதியாக நடத்திட பொது மக்கள், அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதி தேர்தலில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன், கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், அ.ம.மு.க. சார்பில் பாண்டுரங்கன், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த முறையும் மீண்டும் அவர்களே களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது.

ஏற்கனவே பணப்பட்டுவாடா பிரச்சினை காரணமாகத்தான் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது. எனவே மீண்டும் பணப்பட்டுவாடா நடந்து விடக்கூடாது என்பதற்காக வேலூர் தொகுதியில் இந்த முறை பறக்கும் படை சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுக்கள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்வதைதடுக்கவும், இதற்காக வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை கண்காணித்து தடுக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். மாவட்டம் முழுவதும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதற்காக வேலூர் மாவட்டத்தை ஒட்டிய தமிழகஆந்திர எல்லைகளில் உள்ள கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி, பொன்னை, சேர்க்காடு, ஆர்.கே.பேட்டை, குடியாத்தம் தன கொண்டப்பல்லி, பேரணாம்பட்டு பத்தலப்பல்லி, பச்சூர் உட்பட 13 சோதனை சாவடிகளிலும் போலீசாருடன், பறக்கும் படை குழுக்களும் வாகன தணிக்கையை தொடங்கியுள்ளனர். பணப்பட்டுவாடாவை தடுக்க அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததால் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டம் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று நடக்கிறது. இதில் தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News