செய்திகள்

மக்கள் நீதி மய்யம் சார்பில் விருப்பமனு- கமல்ஹாசன் நேரில் வாங்கினார்

Published On 2019-03-06 12:29 IST   |   Update On 2019-03-06 12:29:00 IST
பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து கமல்ஹாசன் விருப்ப மனுக்களை பெற்றார். #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
சென்னை:

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரது கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்கான விருப்பமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது.

தங்கள் கட்சி உறுப்பினர்கள் அல்லாதவர்களும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவித்தது. இதனால் மக்கள் நீதி மய்யத்தில் விருப்பமனு வாங்கும் அளவுக்குக் கூட கட்சியில் உறுப்பினர்கள் இல்லையா என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

கமல் விருப்பமனு வி‌ஷயத்தில் இன்னொரு புதுமையையும் செய்தார். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் விருப்பமனுக்களில் தங்கள் சாதி மற்றும் மதம் ஆகியவற்றைக் குறிப்பிடத் தேவையில்லை என அறிவித்துள்ளார்.

இது தமிழக அரசியல் சூழலில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றது. சினிமாவில் புதுமைகளை மேற்கொண்ட கமல் அரசியலிலும் அதை பின்பற்றுகிறார் என்று பாராட்டுகள் குவிந்தன.



மக்கள் நீதி மய்யம் சார்பில் ‘கட்சியின் பொறுப்பாளர்களை நியமிக்கும் போதுகூட அந்தந்த வட்டாரங்களில் பெரும்பான்மை சாதி, மதத்தை சேர்ந்தவர்களை மக்கள் நீதி மய்யம் சார்பில் நியமிக்கவில்லை.

எனவே விருப்பமனுக்களில் சாதி, மதம் ஆகியவற்றைக் குறிப்பிடத் தேவையில்லை. ஆனால் தனித் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களின் சாதியைப் பார்க்க வேண்டியது கட்டாயமாகிறது’ என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை கமல்ஹாசனிடம் நேரடியாக இன்றும் நாளையும் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசனிடம் விருப்ப மனுக்களை அளிக்க தொடங்கினார்கள்.

இதற்காக காலை 9 மணி முதலே கட்சி அலுவலகத்திற்கு நிர்வாகிகளும் தொண்டர்களும் குவிய தொடங்கினார்கள். விருப்ப மனுக்கள் மீதான பரிசீலனை நாளை முதல் நடைபெற இருக்கிறது. இதற்காக கட்சி துணை தலைவர் மகேந்திரன் தலைமையில் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan

Similar News