சாலை, குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்
- குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வந்தனர்.
- சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.
ஸ்ரீபெரும்புதூர்:
படப்பை அருகே உள்ள செரப்பணஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட நாவலூர் அரசு குடிசை மாற்று வாரியகுடியிருப்பில் 2800 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பனப்பாக்கம் பகுதியில் இருந்து நாவலூர் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலை பயன்படுத்த முடியாத அளவுக்கு குண்டும் குழியுமாக சேதம் அடைந்து உள்ளது.
மேலும் குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திடீரென வண்டலூர்-வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரகடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.