உள்ளூர் செய்திகள்
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு
- 2-வது நிலையில் உள்ள 2-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
- பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள 2 நிலைகளில், முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், இரண்டாவது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 2-வது நிலையில் உள்ள 2-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 600மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அந்த அலகில் ஏற்பட்டு உள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.