உள்ளூர் செய்திகள்

பனியன் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.15 லட்சம் நகை கொள்ளை

Published On 2022-07-28 06:56 GMT   |   Update On 2022-07-28 06:56 GMT
  • வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனுப்பர்பாளையம்:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுபிரபு (வயது 33). திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி லாவண்யா (28) மற்றும் மகன் விகான் பிரபு (3) ஆகியோருடன் அவினாசி சக்திநகரில் வசித்து வருகிறார்.

நேற்று இரவு அவிநாசியை அடுத்து அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்ற விஷ்ணுபிரபு இன்று காலை தனது வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 39 பவுன் தங்க நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் திருடப்பட்டு இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும்.

இது குறித்து விஷ்ணுபிரபு அவிநாசி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News