உள்ளூர் செய்திகள்

தாளவாடி அருகே அடர்ந்த வனப்பகுதியில் 108 ஆம்புலன்சில் கூலி தொழிலாளி மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது

Published On 2023-06-25 11:20 GMT   |   Update On 2023-06-25 11:20 GMT
  • 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு பிரியதர்ஷினியை மருத்துவ குழுவினர் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
  • ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் சுகாதார செவிலியரின் துரித செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி தாலுகா பங்களாதொட்டி ஆசனூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி (20). நிறைமாத கர்ப்பிணியான அவர் பிரசவத்திற்காக தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு பிரியதர்ஷினிக்கு பிரசவ வலி அதிகரித்ததால் வலியால் துடித்தார். உடனடியாக மருத்துவர் அவரை மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கூறினார்.

இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு பிரியதர்ஷினியை மருத்துவ குழுவினர் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஆசனூர் வனப்பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டு இருந்த போது பிரியதர்ஷினிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே நிலைமையை புரிந்து கொண்ட அவசர கால மருத்துவ நுட்புநர் தனசேகர், சுகாதார செவிலியர் லாவண்யா மற்றும் டிரைவர் குருமல்லப்பா வனவிலங்கு நடமாடும் அடர்ந்த வனப்பகுதியில் 108 ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தி பிரசவம் பார்த்தனர்.

இதில் பிரியதர்ஷினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும், சேயும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் சுகாதார செவிலியரின் துரித செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags:    

Similar News