உள்ளூர் செய்திகள்

புழல் சிறையில் பெண் கைதி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-10-22 09:05 GMT   |   Update On 2023-10-22 09:05 GMT
  • கொள்ளை வழக்கில் ஜாமினில் வெளிவந்த காந்திமதி திருச்சி ஜீயர் நகர் பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கினார்.
  • ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் காந்திமதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

செங்குன்றம்:

சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி என்கிற காந்திமதி. 65 வயதான இவர் வேளச்சேரியில் லட்சுமி தேவி என்பவரின் வீட்டில் வேலை செய்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு லட்சுமியை கட்டிப்போட்டு விட்டு 14 பவுன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த வழக்கில் கைதான காந்திமதி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் இந்த வழக்கில் ஜாமினில் வெளிவந்த அவர் திருச்சி ஜீயர் நகர் பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கினார். மூதாட்டி ஒருவரை கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காந்திமதி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் இலவச சட்ட உதவி மூலமாக காந்திமதிக்கு ஜாமின் கிடைத்தது. ஆனால் அவரை அழைத்துச் செல்வதற்கு உறவினர்கள் யாரும் புழல் சிறைக்கு செல்லவில்லை. இதனால் மனமுடைந்த காந்திமதி புழல் சிறை கழிவறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் காந்திமதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News