புழல் ஏரியில் மூழ்கி தந்தை-மகன் பலி
- நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தேடியபோது புழல் ஏரிக்கரையில் மணிகண்டன், விஷ்ணுவின் ஆடைகள் இருந்தது.
- இருவரும் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். நீச்சல் தெரியாததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை.
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சி சோலையம்மன்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது40). அதே பகுதியில் பேன்சி கடை நடத்தி வந்தார். இவரது மகன் விஷ்ணு(10) அருகில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை தந்தை-மகன் இருவரும் பம்மது குளம் பகுதியில் புழல் எரிக்கரையில் குளிக்க சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற விஷ்ணு தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மகனை காப்பாற்ற முயன்றார். இதில் இருவரும் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். நீச்சல் தெரியாததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை.
இதற்கிடையே நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தேடியபோது புழல் ஏரிக்கரையில் மணிகண்டன், விஷ்ணுவின் ஆடைகள் இருந்தது.
இதைத்தொடர்ந்து செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் இரவு வரை அவர்களை புழல் ஏரியில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. அப்போது புழல் ஏரியில் அவர்கள் குளித்த இடம் அருகே மணிகண்டன், விஷ்ணுவின் உடல்கள் மீட்கப்பட்டது. இதனை பார்த்த அவர்களது உறவினர்கள் கதறி துடித்தனர். செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். புழல் ஏரியில் மூழ்கி தந்தை-மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.