உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் திடீர் மரணம்- சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார்

Published On 2023-01-05 09:31 GMT   |   Update On 2023-01-05 09:31 GMT
  • காங்கமுத்துவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
  • காங்கமுத்துவின் அண்ணன் முனியன் என்பவர், மங்களபுரம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா மங்களபுரம் அருகே உள்ள வேம்பாக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் சன்னாசி. இவரது மகன் காங்கமுத்து (வயது 39). இவர் அந்தப் பகுதியில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்தார். ஓய்வு நேரங்களில் கால்நடைகளுக்கு ஊசி போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில், தனக்கு அல்சர் இருப்பதாகவும் வயிறு வலிப்பதாகவும் வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு திம்மநாயக்கன்பட்டியில் உள்ள அவரது நண்பரான ஹோமியோபதி டாக்டர் சக்திவேல் என்பவரிடம் சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது அவருக்கு டாக்டர் ஊசி போட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் காங்கமுத்துவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை ராசிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், காங்கமுத்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். அங்கிருந்து சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் காங்கமுத்துவை சேர்த்தனர். அங்கும் அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து காங்கமுத்துவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதனிடையே காங்கமுத்து சாவில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் காங்கமுத்துவின் அண்ணன் முனியன் என்பவர், மங்களபுரம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.

அதன் பேரில் மங்களபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் காங்கமுத்து எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இறந்த காங்கமுத்துவுக்கு மஞ்சு (25) என்ற மனைவியும், கவிநிலா (4) என்ற மகளும் உள்ளனர்.

Tags:    

Similar News