ஊத்தங்கரை அருகே கார் மோதி வாலிபர் பலி- வண்டியில் 30 குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார்
- சென்னை பதிவு எண் கொண்ட காரில் ஓட்டுனர் இருக்கை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் குட்கா மூட்டைகளை பதுக்கி கடத்தி வந்தது தெரிய வருகிறது.
- விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான கார் ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த தீரன் சின்னமலை தனியார் பள்ளி அருகே பெங்களூருவில் இருந்து ஊத்தங்கரை நோக்கி நேற்று இரவு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த படதாசம்பட்டி கிராமத்தை சேர்ந்த முரளி மகன் தீபன் என்பவர் மீது கார் மோதியது.
இதில் தீபன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்தில் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விபத்தை ஏற்படுத்திய காரை போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த காரில் 30 குட்கா மூட்டைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. உடனே குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் சென்னை பதிவு எண் கொண்ட அந்த காரில் ஓட்டுனர் இருக்கை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் குட்கா மூட்டைகளை பதுக்கி கடத்தி வந்தது தெரிய வருகிறது.
விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான கார் ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.