உள்ளூர் செய்திகள்

மருமகள் உடல்நலம்பெற வேண்டி மாமியார் தீக்குளித்து மரணம்

Published On 2022-10-14 04:27 GMT   |   Update On 2022-10-14 04:29 GMT
  • தனது சொந்த அண்ணன் மகளே தனக்கு மருமகளாக வந்ததால் கவிதா மீது அன்னம் பாசமாக இருந்து வந்துள்ளார்.
  • சமீப காலமாக கவிதாவிற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அன்னம் மனமுடைந்து காணப்பட்டார்.

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை வடக்குத் தெருவை சேர்ந்தவர் மணிமுத்து. இவரது மனைவி அன்னம் (வயது 88). இவர்களது மகன் கண்ணன் (55). அன்னம் தனது சகோதரர் மகளான கவிதா என்பவரை கண்ணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

தனது சொந்த அண்ணன் மகளே தனக்கு மருமகளாக வந்ததால் கவிதா மீது அன்னம் பாசமாக இருந்து வந்துள்ளார். சமீப காலமாக கவிதாவிற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அன்னம் மனமுடைந்து காணப்பட்டார்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக அன்னத்தின் கனவில் அவர் இறந்தால் உனது மருமகள் உடல் நலம் சீராகும் என அசரீரி தோன்றியதாக தனது மகன் கண்ணனிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அன்னம் நேற்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருமகள் உடல்நலம் சீராக வேண்டி மூதாட்டி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News