உள்ளூர் செய்திகள்

கோவையில் விடுதியில் தங்கியிருந்தார்- 5 மாத கர்ப்பமாக இருந்த கல்லூரி மாணவி திடீர் உயிரிழப்பு

Published On 2023-04-03 04:20 GMT   |   Update On 2023-04-03 04:20 GMT
  • விடுதி அறையில் இருந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
  • டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்தபோது அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

கோவை:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் கோவை கோவில்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். இதற்காக மாணவி சரவணம்பட்டியில் உள்ள பெண்கள் விடுதியில் அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

நேற்று விடுதி அறையில் இருந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவருடன் தங்கி இருந்த தோழி ஒருவர் மீட்டு ஆட்டோ மூலம் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், எனவே மேல் சிகிச்சைக்காக வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறும் கூறினர். இதனையடுத்து மாணவியை அவரது தோழி மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்தபோது அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

பின்னர் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சரவணம்பட்டி போலீசார் தனியார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கியது யார் என்றும், அவர் காதல் பிரச்சினையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கர்ப்பம் அடைந்ததன் காரணமாக இறந்தாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News