உள்ளூர் செய்திகள் (District)

பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து: தப்பியோடிய சக மாணவருக்கு வலைவீச்சு

Published On 2023-07-20 09:15 GMT   |   Update On 2023-07-20 09:15 GMT
  • பிளஸ்-2 படித்து வரும் மூன்றடைப்பை சேர்ந்த ஒரு மாணவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார்.
  • காயமடைந்த மாணவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பை அடுத்த கோவைகுளத்தை சேர்ந்த 16 வயது மாணவர் மருதகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

கடந்த 18-ந் தேதி அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மூன்றடைப்பை சேர்ந்த ஒரு மாணவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். இதை பார்த்த கோவைகுளம் மாணவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை கிண்டலடித்து அவதூறாக பேசியுள்ளார். இதையறிந்த மூன்றடைப்பு மாணவர், நேற்று பள்ளிக்கு வந்த கோவைகுளத்தை சேர்ந்த மாணவரிடம் என்னை ஏன் அவதூறாக பேசினாய்? என கேட்டுள்ளார்.

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு 2 பேருக்கும் இடையே கைகலப்பு உருவானது. அப்போது அங்கிருந்தவர்கள் அவர்கள் விலக்கி விட்டனர். பின்னர் நேற்று மாலையில் கோவைகுளம் மாணவர் மருதகுளத்தில் உள்ள மிட்டாய் கடை அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூன்றடைப்பு மாணவர் கையில் வைத்திருந்த சிறிய கத்தியால் கோவைகுளம் மாணவரை குத்திவிட்டு தப்பியோடினார்.

இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பியோடிய மூன்றடைப்பு மாணவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News