உள்ளூர் செய்திகள்

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.60 லட்சம் சுருட்டிய டாக்டர் கைது

Published On 2022-11-11 07:59 GMT   |   Update On 2022-11-11 07:59 GMT
  • மாம்பலம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
  • இளம்பெண் மூலம் சிறுக சிறுக இதுவரை ரூ.60 லட்சம் பணத்தை சுருட்டிய சார்லஸ் இளம்பெண்னை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்தார்.

போரூர்:

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு எம்.ஜி.ஆர் நகர் அடுத்த ஜாபர்கான் பேட்டை பகுதியை சேர்ந்த டாக்டர் மனோஜ் சார்லஸ் என்பவருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் "உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்" என்று ஆசைவார்த்தை கூறிய சார்லஸ் இளம்பெண்ணிடம் அடிக்கடி பணத்தை வாங்கி வந்துள்ளார்.

இளம்பெண் மூலம் சிறுக சிறுக இதுவரை ரூ.60 லட்சம் பணத்தை சுருட்டிய சார்லஸ் இளம்பெண்னை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்தார். இதுபற்றி கேட்டபோது கொலை செய்து விடுவேன் என்று கூறி இளம்பெண்ணுக்கு சார்லஸ் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் திருமணம் செய்து கொள்வதாக மோசடியில் ஈடுபட்ட டாக்டர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

கடன் பிரச்சினையில் தவித்து வந்த சார்லஸ் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இளம்பெண்ணிடம் பணத்தை சுருட்டி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் மனோஜ் சார்லசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News