உள்ளூர் செய்திகள்

ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி: பா.ஜனதா நிர்வாகி அதிரடி கைது

Published On 2023-03-24 14:47 IST   |   Update On 2023-03-24 14:47:00 IST
  • பா.ஜனதா நிர்வாகி ஹரீஷ், மாலதி ஆகிய 2 பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
  • தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் ‘ஆருத்ரா கோல்டு’ நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

சென்னை:

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த 'ஆருத்ரா கோல்டு' நிறுவனம் தமிழகம் முழுவதும் கிளைகளை தொடங்கி தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக கவர்ச்சிகரமாக அறிவித்தனர்.

இதனை நம்பி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் 'ஆருத்ரா கோல்டு' நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்பட்டன. இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர் மற்றும் உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகிய 3 பேரும் வெளிநாட்டில் தலைமறைவாகி விட்டனர்.

மேலும் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான பா.ஜனதா நிர்வாகி ஹரீஷ் மற்றும் அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி ஆகியோர் குறித்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் பா.ஜனதா நிர்வாகி ஹரீஷ், மாலதி ஆகிய 2 பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஹரீஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜனதாவில் விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 8 பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News