உள்ளூர் செய்திகள்
தேவி கருமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
உழந்தைகீரப்பாளையத்தில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.
புதுச்சேரி:
புதுவை உழந்தை கீரப்பாளையம் தேவி கருமாரியம்மன் கோவிலில் 27-ம் ஆண்டு தீமிதி திருவிழா கணபதி ஹோமத்துடன் கடந்த 24-ந் தேதி தொடங்கியது.
நாள்தோறும் பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. கடந்த 27-ந் தேதி சாகை வார்த்தல், சாமி அலங்கார வீதி உலா நடந்தது. இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான 108 பால்குட அபிஷேகம், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி யாகம் நடத்தப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா நேற்று மாலை நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெண் பக்தர்கள் அதிகளவில் தீ மிதித்தனர். ஒரு பக்தர் தனது இரு குழந்தைகளையும் கையில் சுமந்தபடியே வந்து தீமித்து தனது நேர்த்திக்கடனை நிறைவு செய்தார். இதைத்தொடர்ந்து அம்மன் வீதியுலா நடந்தது.