உள்ளூர் செய்திகள்
ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் காலக்கெடுவுக்குள் முடியுமா?- நேரு எம்.எல்.ஏ. கேள்வி
ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் காலக்கெடுவுக்குள் முடியுமா? என்று நேரு எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரியான திட்டமிடுதல் இல்லாமல் முடங்கியுள்ளது. இத்திட்டத்தின் சிறப்பம்சம் தடையில்லா மின்சாரம், சுத்தமான குடிநீர், கழிவுநீர் பாதாள சாக்கடை வழியாக செல்லுதல், குப்பையில்லா நகரம், மின்விளக்குகளால் ஒளிர செய்தல், கண்காணிப்பு கேமரா, நடைபாதை மேம்பாடு பணிகள்தான். இத்திட்டத்துக்கான காலக்கெடு வருகிற மார்ச் மாதம் முடிவடைய உள்ளதாக தெரிகிறது.
திட்டத்தின் அதிகாரிகள் நகர பகுதிகளில் உள்ள எம்.எல்.ஏ.க்களை அழைத்து பணிகள் குறித்து ஆலோசிக்கவில்லை. இந்த காலக்கெடு முடிவதற்குள் அதிகாரிகள் திட்டங்களை செயல்படுத்தி நகர பகுதியை மேம்படுத்துவார்களா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
புதுவை நகர பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குடிநீர் குழாய்கள் பதித்து 30 ஆண்டுகளை கடந்து விட்டதால் துருவுடன் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதை மேம்படுத்த நடவடிக்கை இல்லை. பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தவில்லை. தெருவிளக்குகள் எரியாத தால் குற்ற சம்பங்கள் அரங்கேறு கிறது. இதை தடுக்க கேமரா பொருத்த வில்லை.
நடைபாதை ஆக்கிரமிப்பால் சுற்றுலா பயணிகளும், புதுவை மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. முக்கிய வாய்க்கால்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்யவில்லை.
பெரியமார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் காலக் கெடுவுக்குள் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்குத்தான் அவப்பெயர் ஏற்படும். இதுகுறித்து முதல்&அமைச்சர், அமைச்சர், திட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.