உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

அரசு துறைகளில் தனியார் நிறுவன ஈடுபாட்டை தடுத்து நிறுத்த வேண்டும்-விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்

Published On 2022-02-21 11:24 IST   |   Update On 2022-02-21 11:24:00 IST
மின் அளவிடும் பணியில் தனியார் நிறுவன ஈடுபாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:

புதுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மக்களின் வைப்பு நிதியின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மின்துறை எந்தவித இழப்புமின்றி இயங்கி வரும் நிலையில் சுமார் 85 கோடி மதிப்புள்ள புதுவை மின்துறையை மக்கள் விரோத மத்திய பா.ஜனதா அரசு தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிக்கு உறுதுணையாக செயல் பட்டு வரும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் உள்பட மத சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து போராடி எதிர்த்து வந்தது.

மேலும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா அரசின் தனியார் மயம் கொள்கைக்கு எதிராக மின்துறை ஊழியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மின்துறை ஊழியர்களிடம் முதல்-அமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கையின் காரணமாக அரசின் உத்தர வாதத்தை ஏற்று மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில் மத்திய பா.ஜனதா அரசின் மறைமுகமான தனியார் மயம் நடவடிக்கையின் காரணமாக மின்சாரம் பயன்படுத்தக்கூடிய மின் நுகர்வோரின் வீடு, கடைகள், தொழில் நிறுவனங்களில் மின் அளவீடு கணக்கெடுக்கும் பணியை மின்துறை ஊழியர்களுக்கு பதிலாக தற்போது மின்துறையை சாராத நபர்களின் மூலம் மின் அளவீடுகளை கணக் கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தும் செயலை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் அரசு மத்திய பா.ஜனதா அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து துணைபோவதை கைவிட்டு புதுவை மக்களின் உரிமைகளை பாதிக்கும் நடவடிக்கைகளுக்கு துணை போகாமல் மறைமுகமாக மின் அளவீடு உள்பட எந்த பணியையும் தனியார் மூலம் செயல்படுத்தாமல் அப்பணிகளை உணடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Similar News