உள்ளூர் செய்திகள்
கைது

போலி ஆவணம் தயாரித்து ரூ.18 கோடி நிலம் விற்பனை- தந்தை, மகன்கள் கைது

Published On 2022-02-21 08:46 IST   |   Update On 2022-02-21 08:46:00 IST
காரைக்காலில் போலி ஆவணம் தயாரித்து ரூ.18 கோடி நிலம் விற்பனை செய்தது தொடர்பாக தந்தை, மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
காரைக்கால்:

காரைக்காலை அடுத்த நெடுங்காடு அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் குமார் கேசவன். இவர் தனது குடும்பத்தினருடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தார். இவருக்கு காரைக்கால், நெடுங்காடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் உள்ளது.

இந்த நிலங்களை மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரைச் சேர்ந்த தில்லையம்மாள் என்பவருக்கு பவர் வழங்கி, அவரது பராமரிப்பில் விடப்பட்டது. இதை பயன்படுத்தி, தில்லையம்மாள் மற்றும் அவரது மகன் தேவராஜ் ஆகியோர் சேர்ந்து, குமார் கேசவனின் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை கைப்பற்ற முயற்சி செய்தனர்.

இதனை தனது உறவினர்கள் மூலம் அறிந்த குமார் கேசவன், தில்லையம்மாளுக்கு வழங்கிய பவரை 1996-ல் ரத்து செய்து விட்டார். ஆனால் ரத்து செய்யப்பட்ட பவர் பத்திரத்தோடு மேலும் சில போலி ஆவணங்களை தயாரித்து, கடந்த 2003-ம் ஆண்டு தில்லையம்மாள் தனது பேரன் ஆனந்த் என்பவருக்கு நிலங்களை விற்பனை செய்துள்ளார்.

இதற்கிடையில் குமார் கேசவனும், தில்லையம்மாளும் உயிரிழந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தேவராஜ் மற்றும் அவரது மகன்கள் ஆனந்த், ஆதித்ய சுந்தரபாண்டியன் ஆகியோர், நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பவர் பத்திரம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் உள்ள குமார் கேசவனுக்கு சொந்தமான ரூ.18 கோடி மதிப்பிலான இடங்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இது பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் குமார் கேசவன் மகன் குமார் ஆனந்துக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் தனது உறவினரான நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் மூலம் திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜ் மற்றும் அவரது மகன்கள் ஆனந்த், ஆதித்ய சுந்தரபாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்.

தேவராஜ், ஆனந்த் ஆகிய 2 பேர் மீது ஏற்கனவே நிலமோசடி வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.



Similar News