உள்ளூர் செய்திகள்
சேலையில் தீ பிடித்து மூதாட்டி பலி
வீட்டில் விளக்கு ஏற்றியபோது சேலையில் தீ பிடித்து மூதாட்டி உடல் கருகி பரிதாபமாக இறந்து போனார்.
புதுச்சேரி:
புதுவை கருவடிக்குப்பம் லட்சுமி நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 70).இவரது மனைவி அம்பிகா (65).இவர்களுக்கு 2 மகள்களும் அய்யப்பன் என்ற மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர்.அய்யப்பன் கல்வித்துறையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
வயது முதிர்வு காரணமாகவும்,உடல் நலக்குறைவாலும் குப்புசாமியும், அம்பிகாவும் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இந்தநிலையில் அம்பிகா சாமி கும்பிடுவதற்காக வீட்டில் விளக்கு ஏற்றினார்.அப்போது எதிர்பாராத விதமாக அம்பிகாவின் சேலையில் திடீரென தீ பற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த அம்பிகா சத்தம்போட்டு மயங்கி விழுந்தார்.
சேலையில் சிறிதாக பற்றிய தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதனையறிந்த அம்பிகாவின் மகன் அய்யப்பன் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அம்பிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து அய்யப்பன் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீஸ் ஏட்டு சுப்ரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
சாமி கும்பிடுவதற்காக விளக்கேற்றிய போது சேலையில் தீ பிடித்து மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.