நெடுங்காடு கிராம பகுதிகளில் பஸ்களை இயக்க கோரி கம்யூ. கட்சியினர் சாலை மறியல்
காரைக்கால்:
காரைக்காலிலிருந்து கோட்டுச்சேரி, வடமட்டம், நெடுங்காடு வழியாக மயிலாடுதுறை, கும்பகோணத்துக்கு தமிழக மற்றும் புதுச்சேரி அரசுப் பஸ்கள், கடந்த பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. ஆனால், அண்மைக்காலமாக அவையாவும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், முதியோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின் றனர்.
எனவே, மீண்டும் அந்த வழித்தடங்களில் அரசு மற்றும் தனியார் பஸ் வசதிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழித் தடங்களில் அனுமதி பெற்றுள்ள ஷேர் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் அருகே நெடுங்காடு கடைத்தெரு பகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.
நெடுங்காடு பகுதி செயலாளர் பாக்கியராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் திவ்ய நாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் தமீம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்த புதுச்சேரி சாலை போக்குவரத்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி 45 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் ததையடுத்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.