உள்ளூர் செய்திகள்
புதுவை சட்டசபை 23-ந்தேதி கூடுகிறது
புதுவை சட்டசபையின் கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்டு 26-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.
புதுச்சேரி:
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததால் பாராளு மன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலாசீத்தாராமன், யூனியன் பிரதேசமான புதுவைக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி ரூ.9 ஆயிரத்து 900 கோடிக் கான முழுமையான பட்ஜெட்டை ஆகஸ்ட்டில் தாக்கல் செய்தார். சட்டசபை கூடி வருகிற 26-ந்தேதியுடன் 6 மாதம் நிறைவடைய உள்ளது. 6 மாதத்துக்கு ஒருமுறை சட்டசபையை கூட்ட வேண்டும் என விதி உள்ளது.
இதனால் வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) புதுவை சட்டசபையில் குளிர்கால கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டம் ஒரு நாள் மட்டுமே நடைபெறும் என தெரிகிறது. புதுவை சட்டசபையில் அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக புதுவை சட்டசபையில் தொடர்ந்து மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஜூலை, ஆகஸ்டு மாதங் களில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய ரங்கசாமி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளது. அரசு துறைகளில் பட்ஜெட் தொடர்பான கூட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுவை நிதித்துறை செயலாளர் பிரசாந்த் கோயல் டெல்லி சென்று புதுவை பட்ஜெட் தொடர்பாக உள்துறை, நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.