உள்ளூர் செய்திகள்
புதுவை கடற்கரை சாலை-பாரதி பூங்காவில் காதல் ஜோடிகளுக்கு போலீசார் கெடுபிடி
புதுவை கடற்கரை சாலை-பாரதி பூங்காவில் போலீசாரின் கெடுபிடியால் காதலர்கள் தனித்தனியாக பாரதிபூங்காவில் நுழைந்து பின்னர் ஜோடியாக அமர்ந்தனர்.
புதுச்சேரி:
உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டது.
புதுவையில் வார விடுமுறையையொட்டி வெள்ளிக்கிழமை மாலை முதல் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இதில் காதல்ஜோடிகள் அதிகளவில் இடம் பெற்றிருந்தனர். இன்று காதலர் தினத்தையொட்டி நகர பகுதியில் உள்ள சாலைகளில் காதல் ஜோடிகளின் நடமாட்டம் அதிகம் இருந்தது. கடற்கரை சாலைக்கு வந்த காதல் ஜோடிகளிடம் போலீசார் கெடுபிடியாக நடந்துகொண்டனர்.
வெளிமாநிலத்திலிருந்து வந்த காதல்ஜோடிகளிடம், முக கவசம் அணியவில்லை என அபராதம் விதித்தனர்.
கடற்கரை சாலை, பாரதி பூங்காவில் கையில் பூக்கள், சாக்லெட்டுடன் காதலர்கள் இருந்ததை காண முடிந்தது. போலீசாரின் கெடுபிடியால் காதலர்கள் தனித்தனியாக பாரதிபூங்காவில் நுழைந்து பின்னர் ஜோடியாக அமர்ந்தனர். அவர்களை போலீசார் விசாரித்தனர். இதனால் காதல்ஜோடிகள் அங்கிருந்து கிளம்பினர்.
தாவரவியல் பூங்காவில் டிக்கெட் பெற்று சென்றதால் காதல்ஜோடிகளுக்கு கெடுபிடி இல்லை. ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் வாய்ப்பாக உள்ள காதலை போற்றுவோம் என வலியுறுத்தி தந்தை பெரியார் தி.க. சார்பில் பாரதி பூங்கா, கடற்கரைக்கு வந்த காதலர்களுக்கு பூக்கள் வழங்கப்பட்டது.
இதில் மாநில தலைவர் வீரமோகன், துணைத்தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேஷ், பொருளாளர் பெருமாள், இளைஞரணி தலைவர் சிவமுருகன், தொழிற்சங்க தலைவர் ஜெகன், மகளிரணி தலைவர் சுகந்தி, மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா உட்பட பலர் கலந்துகொண்டு காதலர்களுக்கு பூக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.