உள்ளூர் செய்திகள்
ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில் களுடன் போலீசார்.

புதுவையில் இருந்து தமிழகத்துக்கு ரெயிலில் கடத்த முயன்ற 314 மதுபாட்டில்கள் பறிமுதல்

Published On 2022-02-14 08:42 IST   |   Update On 2022-02-14 08:42:00 IST
புதுவையில் இருந்து தமிழகத்திற்கு ரெயில் மூலம் கடத்த முயன்ற 314 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:

புதுவையில் இருந்து சென்னைக்கு நேற்று காலை 5.35 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது ரெயில்வே போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் உத்தரவின் பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 2 வது பிளாட்பாரத்தில் ஒரு இருக்கையின் அடியில் 3 பெரிய பைகள் இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பைகளை பிரித்து பார்த்தனர். அப்போது 3 பைகளில் 314 குவார்ட்டர் மது பாட்டில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.14 ஆயிரத்து 440 ஆகும்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக புதுவையில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மர்மநபர் கடத்த முயற்சி செய்ததும், போலீசாரை கண்டதும் மதுபாட்டில்கள் அடங்கிய பைகளை போட்டு விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில் களை கடத்த முயன்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News