உள்ளூர் செய்திகள்
ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பறவை இறைச்சி பறிமுதல்
புதுவையில் வேட்டையாடப்பட்ட ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பறவை இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி:
விழுப்புரம் வனப்பிரிவு மற்றும் தன்னார்வலர்களின் ஒருங்கிணைப்பில் ஆசிய நீர் பறவைகள் கணக் கெடுப்பு பணி ஊசுடு பறவைகள் சரணாலயத்தில் நடத்தப்பட்டது.
அப்போது வில்லியனூர் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக விழுப்புரம் மாவட்ட வன அலுவலகத்திற்கு புகார் வந்தது.
இதனையடுத்து அவர்கள் இரு பிரிவாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பத்துத்கண்ணு உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சிக்காக பறவைகள் வேட்டையாடி விற்கப்பட்டது தெரியவந்தது.
விற்பனை செய்தவர்கள் பறவைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் 53 இறந்த பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ25 ஆயிரம் ஆகும்.
இதில் நத்தை குத்தி நாரை 6, ஆள்காட்டி குருவி 1, சிறிய கொக்கு 2, உன்னி கொக்கு7, குருட்டு கொக்கு 11, வெள்ளை அறிவால் மூக்கன், 13, ஜொலி ஜொலிக்கும் அரிவாள் மூக்கன் 5, லக்கா 3, ஆகியவை இறைச்சியாக பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையில் 13 கிளிகள் உயிருடன் பிடி பட்டது.
இதனிடையே வீட்டில் கிளிகள் வைத்திருப்பவர்கள் அதனை தாமாக முன்வந்து புதுவை வனம் மற்றும் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.