உள்ளூர் செய்திகள்
மரணம்

நாயை குளிப்பாட்ட சென்ற பிளஸ் -2 மாணவன் குளத்தில் மூழ்கி பலி

Published On 2022-02-11 16:03 IST   |   Update On 2022-02-11 16:03:00 IST
காரைக்காலில் நாயை குளிப்பாட்ட சென்ற பிளஸ் -2 மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால்:

காரைக்கால் வேட்டக்காரன் வீதியைச்சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் காரைக்காலில் மதுபான கடைகளின் பங்குதாரராக இருந்து வருகிறார். அவரது மகன் கவுசிக் (வயது17). இவர் காரைக்கால் தருமபுரம் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று காலை கவுசிக், காரைக்கால் கோட்டுச்சேரியை அருகே திருவேட்டக்குடி குளத்து மேடு பகுதியில் உள்ள குளம் ஒன்றில், நண்பர்களோடு நாயை குளிப்பாட்ட சென்றார்.

அப்போது நாயுடன் கவுசிக் குளத்தில் இறங்கியபோது, குளத்தின் உள் பகுதிக்கு நீச்சல் அடித்து சென்றார். அந்த குளம் அண்மையில் மணல் எடுத்த பகுதி என்பதால், சேறுடன் காணப்பட்டது. இதனை அறியாத கவுசிக் சேற்றில் சிக்கி மூழ்கியுள்ளார். உடனடியாக நண்பர்கள் குளத்தின் பல இடங்களில் தேடியும் கெளசிக் கிடைக்காததால், காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு நண்பர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், குளத்தின் பல இடங்களில் தேடி, சேறில் சிக்கி உயிரிழந்த கவுசிக் உடலை கைபற்றி கரைக்கு கொண்டுவந்தனர்.

பின்னர் கவுசிக் உடல் காரைக்கால் அரசு மருத்துவமனை பிரேத பரிசோனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. தகவல் அறிந்த கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News