உள்ளூர் செய்திகள்
பலி

நாயை குளிப்பாட்ட சென்ற பிளஸ்-2 மாணவர் குளத்தில் மூழ்கி பலி

Published On 2022-02-11 08:20 IST   |   Update On 2022-02-11 08:20:00 IST
காரைக்கால் அருகே நாயை குளிப்பாட்ட சென்ற பிளஸ்-2 மாணவர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்கால்:

காரைக்கால் வேட்டக்காரன் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் மதுபான கடைகளின் பங்குதாரராக இருந்து வருகிறார். இவரது மனைவி கவுரி மனோகரி. நெடுங்காடு பால்பவன் இசை ஆசிரியை. இவர்களது மகன் கவுசிக் (வயது 17). காரைக்கால் தருமபுரம் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை காரைக்காலை அடுத்த திருவேட்டக்குடி குளத்துமேடு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் தனது நாயை குளிப்பாட்ட நண்பர்களுடன் கவுசிக் சென்றார்.

பின்னர் நாயை குளிப்பாட்ட குளத்தில் கவுசிக் இறங்கினார். அப்போது நாய் திடீரென நீச்சல் அடித்தபடி குளத்தின் உள் பகுதிக்கு சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கவுசிக், நாயை பிடிப்பதற்காக சென்றார். அப்போது அவர் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.

இதனால் தண்ணீரில் தத்தளித்தபடி கூச்சல் போட்டார். உடன் சென்ற நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. சிறிது நேரத்தில் அவர் நீரில் மூழ்கினார். இதுகுறித்து காரைக்கால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பிணமாக மீட்பு

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய கவுசிக்கை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அவரை பிணமாக மீட்டனர். அண்மையில் குளம் தூர் வாரப்பட்டதால் ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கி கவுசிக் இறந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரது உடலை தீயணைப்பு படை யினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாயை குளிப்பாட்ட சென்ற இடத்தில் பிளஸ்-2 மாணவர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News