உள்ளூர் செய்திகள்
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம்

Published On 2022-02-10 13:53 IST   |   Update On 2022-02-10 13:53:00 IST
புதுவை மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி: 

புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணி ஆட்சியில் பங்கேற்றுள்ள பா.ஜ.க.வுக்கு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாசஅசோக் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

சட்டமன்ற பதவி கிடைக்காத என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.  ஆட்சி அமைந்து 8 மாதமாகியும் இதுவரை வாரிய பதவிகள் வழங்கப்படவில்லை. சமீபத்தில் பா.ஜ.க.வினர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள், ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவிகள் கேட்டனர். 

அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் வாரிய பதவி வழங்க முடியாது என முதல்-அமைச்சர் ரங்கசாமி மறுத்துவிட்டார். இதனால் பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். பா.ஜ.க. ஆதரவு சுயேட்சைகள் தங்கள் ஆதரவை விலக்கிக்கொள்ள திட்டமிட்டனர். அவர்களை சமாதானப்படுத்த பா.ஜ.க. பல்வேறு முயற்சிகளை எடுத்தது.

இந்த நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் ஓட்டல் அக்கார்டில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பங்கேற்றார். 

இந்த கூட்டத்தில் 3 ஆதரவு சுயேட்சைகளுக்கும் வழக்கம்போல அழைப்பு அனுப்பப்பட்டது. கூட்டத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், நியமன எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், அசோக்பாபு, வி.பி.ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். 

கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தொகுதியில் நலத்திட்டங்களை செயல்படுத்தாமலும், தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பா.ஜனதா நிறைவேற்றாதது குறித்தும் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் பேசினர். 

இதைத்தொடர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏ.க் களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கட்சித் தலைமை மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.  ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற முடிவெடுத்திருந்த நிலையில் அவர்கள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்றதால் சமாதானம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

Similar News