உள்ளூர் செய்திகள்
பொது இடத்தில் பன்றிகள் திரிந்தால் நடவடிக்கை-ஆணையர் எச்சரிக்கை
பொது இடத்தில் பன்றிகள் திரிந்தால் சட்ட நடவடிக்கை வில்லியனூர் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
பன்றிகள் பொது இடங்களில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பன்றிகள் வளர்ப்போர் அவற்றை வெளியில் திரிய விடாமல் பட்டியில் வைத்து வளர்க்குமாறு பல முறை எச்சரிக்கை செய்யப்பட்டது. ஆனால், உரிமையாளர்கள் உதாசீனப்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து பொது சுகாதாரத்துக்கும், விளை நிலங்களுக்கும், பொது மக்கள் உயிர் மற்றும் உடமைகளுக்கும் கேடு விளைவிக்கின்றனர். பன்றி வளர்ப்போரிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதில் பன்றிகளை பட்டியில் வளர்ப்போம், வெளியில் திரிய விட மாட்டோம், மீறி வெளியில் திரியும் பன்றிகளை பிடித்து நிபந்தனைகள் இன்றி அப்புறப்படுத்திக் கொள்ளலாம் என எழுத்துபூர்வமாக அளித்த உறுதிமொழியை மீறி செயல்படுகின்றனர்.
விதிகளை மீறி பன்றிகளை பொது இடங்களில் திரியவிடுவது கொம்யூன் பஞ்சாயத்து சட்டத்துக்கு எதிரான செயல்பாடு. எனவே, இனி பன்றிகளை வெளியில் திரிய விடக்கூடாது என உத்தரவிடப்படுகிறது.
இன்று முதல் 5 நாட்களுக்குள் பொது இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளை உரிமையாளர்களே உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். தவறினால் பன்றி வளர்ப்போர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். பொது வெளியில் சுற்றித்திரியும் பன்றிகள் முன்னறிவிப்பின்றி பிடித்து அப்புறப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.