உள்ளூர் செய்திகள்
கோழி மேய்ந்த தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர்
வீட்டில் கோழி மேய்ந்த தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டகுப்பம் பெரிய முதலியார் சாவடி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமு (வயது 46). இவர் கட்டிட தொழிலாளி. இவர் தனது வீட்டில் வான்கோழி வளர்த்து வருகிறார்.
வான்கோழி பக்கத்து வீட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவரான பிரகாஷ் என்ற கதிரவன் வீட்டில் மேய்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது குடி போதையில் இருந்த பிரகாஷ் ஆத்திரமடைந்து வான்கோழியை கல்லால் தாக்கினார்.
இதனை ராமு தட்டிக் கேட்டார். அப்போது கையில் வைத்திருந்த கத்தியால் ராமுவை பிரகாஷ் குத்தினார். இதில் ராமுவுக்கு வயிற்று பகுதியில் கத்திக்குத்து விழுந்தது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ராமுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப்&இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பிரகாசை கைது செய்தனர்.